சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதி ஆசிர் மாகாணத்தில் பெண் குழந்தைகளை காவலர்களும், சில நபர்களும் தாக்குகின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்களை இரண்டாம்தரக் குடிமக்களாகக் கூட கருதாத நிலை தொடர்கிறது. பல்வேறு உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பலரும் சவூதி அரேபியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். அரசின் அடக்குமுறைகளை மீறி பெண்களும் தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். போராட்டங்களை ஒடுக்க முயற்சிக்கும் சவூதி அரேபிய அரசு, போராட்டங்களில் ஈடுபடாத பெண்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 884 கி.மீ. தொலைவில் உள்ள காமிஸ் முசைத் என்ற நகரில் அனாதைக் குழந்தைகள் மீது காவலர்கள் துணையுடன் பலர் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தெரியாமல், அதைப் பதிவு செய்த ஒரு பெண் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். டுவிட்டரில் முதலில் பதிவான அந்த வீடியோ, பல ஊடகங்கள் வழியாக உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. பெண்கள் மீதான அந்தக் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, உலகம் முழுவதும் இருந்து கண்டனங்களும் எழுந்துள்ளன.
அந்தக் கொடூரமான சம்பவத்தில், பெண்களையும், பெண் குழந்தைகளையும் சீருடை அணிந்த காவலர்களும், வேறு சிலரும் கம்புகளைக் கொண்டும், இடுப்பு பெல்ட்டுகளைக் கொண்டும் அடித்தனர். ஓட முயன்றவர்களின் கால்களைக் கயிறுகளால் கட்டித் தாக்கினார்கள். அனாதை இல்லத்திற்குள் இருந்து ஒரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு சாலையில் கிடத்தி அடித்தார்கள். உதவி கோரி அந்தப் பெண் கதறுவது சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளது.
சர்வதேச சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரியிருக்கிறார்கள். வருங்கால மன்னர் முகம்மது பின் சல்மானின் அதிகாரத்தில் பெண்கள் எவ்வளவு நசுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது பெரிய எடுத்துக்காட்டு என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சவூதி அரேபியாவின் அடக்குமுறைகளால் நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் வசித்து வரும் அரசு எதிர்ப்பாளரான அப்துல்லா அல் ஜெர்வி, "தங்கள் உரிமைகளைப் பெண்கள் தொடர்ந்து கோரி வருகிறார்கள். அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். போராடும் பெண்களை ஒடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்கிறார்.
தொடரும் ஆபத்து
பெண்களுக்கு மட்டுமல்ல, தற்போது இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வந்துள்ளவர்களுக்கும் ஆபத்து தொடர்கிறது என்று எச்சரிக்கும் ஜெர்வி, "அந்த அனாதைக் குழந்தைகள் இருக்கும் மையத்தின் நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. உடனடியாக அங்கு தலையீடு செய்யப்பட வேண்டும். இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வரும் சவூதி அரேபிய மன்னராட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது பற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், குடியரசுக்கட்சியோ அல்லது ஜனநாயகக் கட்சியோ, எது ஆட்சியில் இருந்தாலும் இந்தக் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, சவூதி அரேபியாவிற்கான ஆதரவு செயல்பாடுகளை அமெரிக்கா அதிகரித்தே வந்திருக்கிறது.